• +91 97102 30097
  • reach@yogakudil.org


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு. 

 

 

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கோல் என வேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

 

 

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.

 

 

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும்-இன்னாத

நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.

 

 

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

 

 

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா .

 

 

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் 

பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்

பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்.

 

 

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகுமாம் குணம் .

 

 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.

 

 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.

 

 

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

 

 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல்.

 

 

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்

உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது

மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும்.

 

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்.

 

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி.

 

 

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்.

 

 

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

 

 

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

 

 

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)

அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய

பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்.

 

 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி - தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்

விதியின் பயனே பயன்.

 

 

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு.

 

 

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.

 

 

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே

கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.

 

 

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீர்ஒழுகு சான்றோர் சினம்.

 

 

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்

கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

 

 

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்.

 

 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

 

 

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்

அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

 

 

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்

தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்

மனம்சிறியர் ஆவரோ மற்று.

 

 

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை

ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து

போம்போ(து) அவளோடு (ம்) போம்.

 

 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.