• +91 97102 30097
  • reach@yogakudil.org


 à®šà®¤à¯à®šà®™à¯à®•à®®à¯

 

அன்பு நெஞ்சங்களே! இந்த பதிவின் மூலம் உங்களின் மனதினை தொடும் இனிய சூழலை இறைவன் அருளட்டும். இணக்கமுடன் வாசிக்க வணக்கமுடன் எழுதுகிறேன்.


சத்சங்கம் என்றால் என்ன? என்பதை முதலில் ஆராய்வோம் சத்சங்கம் என்பது இரண்டு சொற்கள் இணைந்த ஒரு சொல். சத் என்ற வார்த்தையும் சங்கம் என்ற வார்த்தையும் இணைந்திருக்கிறது.


சத் என்பது காண முடிந்த, உணரமுடிந்த சிவம் அதாவது பார்க்கப்படும் பொருள், சங்கம் என்பது இணைதல், கூடுதல் என்ற பொருள் சத்சங்கம் என்பது பார்க்கப்படும் பொருளுடன் கூடுவது.


பொருளுடன் கூடுவது, உண்மைப் பொருளுடன் இணைவது பார்க்கப்படும் பொருளுடன் ஒத்திசைவு பெறுவது என பலவகையாக மொழியியல் விளக்கம் பெறப்படுகிறது.


சத்சங்கம் என்பது குரு சீடர்களுக்குள் நடக்கும் உரையாடல் என்றும் குருவின் அனுபவத்தை சீடர்களுக்கு வழங்குவது என்றும் பொருள்படும்.


நாம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் சத்சங்கம் இப்பதிவின் வழியே துவங்குகிறோம்.


இறைமை நாத வடிவம் என்று முன்னோர்கள் மொழிந்துள்ளார்கள் என்றால் அவர்கள் அதனை அனுபவித்திருக்கிறார்கள்.


அவ்வகையில் சத்தத்தை நாமும் உணர்ந்தால் அதுவும் சத்சங்கமே அதாவது சத்தம் சங்கமித்தல் என்ற பொருளில்.


பொதுவாக எதையும் அனுபவிக்கும் பொழுதே அதன் உண்மை தன்மை நன்றாக விளங்கும். அதை விடுத்து அனுபவமின்றி அதனைப்பற்றி விளக்குவதால் எந்த பயனும் விளையாது.


முன்னோர் மொழிந்த நாதம் அவர்களது அனுபவம் ஆயினும் அடுத்த சிலர் அதை அனுபவமின்றியே விளக்க முற்பட்டார்கள். மேலும் போலியான விளக்கங்களால் அடுத்த மனிதர்கள் ஏமாற்றப்பட்டு அதைப்பற்றிய வெறும் வார்த்தைகளை மட்டுமே மனப்பாடம் செய்தார்கள்.


நாதவடிவானவளே என்று இறைவனை அழைப்பதும் நாதத்தின் முடிவில் நாதந்தம் இருப்பது என்று திருமந்திரமும் நாத விந்து காலாதி நமோ நம என்றும் நாதம் உணர்ந்தவர்கள் விளக்கினார்கள் என்றால் அதைப் படித்துவிட்டு பேசியவர்கள் அதைப்பற்றி அதிகம் பேசினார்கள். அது ஓம் என்று ஒளிக்கிறது ஓம் ஓம் ஓம் என்று ஒலிக்கிறது என்றும் ஏதோ கதைகள் கட்டினார்கள்.


*ஓம் என்பது சத்தத்திற்கான குறியீடு. ஆனால் அது அப்படி ஒரு வார்த்தையாக இல்லை என்பது அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதரும் உணரலாம்.*


அடியேனோ அல்லது முன் மொழிந்த முன்னோர்களோ குறிப்பிடும் ஓசையானது எந்த இன, மத, மொழி பேதம் இன்றி அனைத்து மனிதர்களும் உணரும் ஒன்று.


இறைவனே இசை வடிவினன் சத்தத்திலிருந்து தோன்றி சத்தத்தில் முடிகிறது. *சத்தம் என்பது எதைக்கொண்டும் எழுப்பும் ஓசையாக இல்லாமல் உன்னிலிருந்து எழுந்தால் அதுவே இறை நாதம்.*


வேதங்களின் முடிவாக இருப்பது நாதம் நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்பதும், ஓம்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை என்பதும் இதற்கு சான்றாக அமையும் வரிகள்.


கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது என்பதும் ஆதியிலே வார்த்தை இருந்தது என்பதும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் வரிகளே.


*இறைவன் என்பது மதச்சடங்குகள் செய்து மனிதரில் புனிதன் என்று தன்னை நிருபிப்பதற்கானது இல்லை. அதற்கு மாறாக இறைவன் என்னை படைத்து தன்னை நிரூபித்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்வது.*


அப்படி புரிந்து கொள்ளும் மனிதனுக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற, ஏற்பட வாய்ப்பாக உள்ளதுதான் சத்தம்.


எனவேதான் 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை -411


என்று உணர்வு பெற்றவரும், உண்மையை உணர்ந்தவரும், உலகில் அனைவரும் உணர, உணர்த்த வல்லவருமான திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் உரைக்கின்றார்.


கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், கர்த்தரை புரிந்து கொள்வதே ஞானம் என்ற வகையில் நாதம் அறியும் விதத்தில் நம் மனதை ஒரு நிலைப் படுத்துவோம். அதற்கு நமது பயிற்சி அமைப்புகள் உதவும் என்று பெருமிதம் கொள்வோம்.


தொடர்ந்து தியானம் செய்ய தூண்டுகோலாக அமையட்டும், துணையாக இருக்கட்டும் இறைவன். சத்சங்கம் தொடரட்டும்..... 


அன்பு நெஞ்சங்களே!

உங்கள் மனதினை தொடும் மகத்துவத்தை இறைவன் அருளட்டும்...

இணக்கமுடன் வாசிக்க வணக்கமுடன் எழுதுகிறேன்.

சத்சங்கத்தில் உபதேசம் குறித்து வெளிப்படையாக பேசமுடிவதில்லை, அல்லது எல்லோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசம் பேசக்கூடியது இல்லை.


இக்கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக விவேகசிந்தாமணி என்ற நூலில் மற்றவர்க்கு சொல்லத் தகாதவையாக


குருஉப தேசம், மாதர் 

கூடிய இன்பம், தன்பால்

மருவிய நியாயம், கல்வி

வயதுறச் செய்த தர்மம்

அரிய மந்திரம், விசாரம்,

ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்

ஒருவரும் தெரிய ஒண்ணாது

உரைத்திடில் அழிந்து போமே

- விவேக 66


எனவே எந்த சத்சங்கத்திலும் உபதேசம் குறித்து இலை மறைத்த காய் போலவே பேசவேண்டியதாகிறது.


நாதம் குறித்த தகவல்கள் போன சத்சங்கத்தில் சற்று பார்த்தோம், அவைகள் அதை குறித்த முழுமை இல்லை. அது அனுபவமாக மாற வேண்டும். அதுவே அடியேன் உங்களிடம் எதிர்பார்ப்பது. மேலும் அதுதான் உங்களுக்கு நல்லது.


இங்கே *உபதேசம்* குறித்து எழுதப்படுகிது. உபதேசம் என்பது துணையாக இருக்கும் நாடு எனப்படும்.


உப + தேசம் என்ற இரண்டு வார்த்தைகள் இணைந்த ஒரு சொல். இதன் பொருள் உபயமாக இருக்கும் தேசம் என்றும், உபமாக இருக்கும் தேசம் என்றும் வரையறுக்கலாம்.


இன்று உபதேசம் என்பது அறிவுரைகள் வழங்குவது என்ற பொருளில் கையாளப்படுகிறது. தனக்கு புரிந்து விட்டதாக அல்லது தனது புரிதல் சரியானது என்ற நினைப்பில் அடுத்தவருக்கு போதிப்பது உபதேசம் அன்று.


குரு சீடனுக்கு விளக்கி இதுதான் அது என்று சுட்டிக்காட்டுவது. இறைவனின் அசல் தன்மையை அறிவதற்கு உதவும் அறிய சாதனத்தை குரு உபதேசம் என்று காட்டிக் கொடுப்பார்.


*அதனை கருமாரி என்றும், கற்பகம் என்றும், கொய்யாப் பழம் என்றும், மாதுளம் பழம் என்றும், பார்ப்பான் என்றும், பறையன் என்றும் விளக்கி சினையாகு பெயர் என்றும் வினையாகு பெயர் என்றும் உரைப்பார்.*


உபதேசத்தை முதலில் தெரிந்து கொண்டு இறைமையை அடையும் யோகப்பயிற்சிகள் செய்தால் உன்னத அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் வாய்க்கும்.


யோகப்பயிற்சிகள் பலப்பல இருப்பினும் உங்களுக்கு ஏதுவான பயிற்சிகளை நீங்கள் தேர்வு செய்து கொண்டு குருவின் துணையுடன் இறைமையை அடைய முயலலாம்.


தன்னிச்சையுள்ள மனிதன் சுயமாகவும் இறையை அடைய முடியும். அதற்கு குருவின் நேரடி தொடர்பு அவசியமில்லை. தன்னார்வம் மிகுந்த எந்த மனிதரும் இறைமையை அடைய முடியும். குருவின் துணை ஒரு பக்க பலமே அன்றி குரு மட்டுமே போதுமானது இல்லை.


பயிற்சிகள் குருவின் மூலமோ அல்லது புத்தகத்தின் மூலமோ அறிந்து கொண்டாலும் பயின்று பார்ப்பது முக்கியம். மேலும் உபதேசம் அறிந்து கொண்டால் ஆன்மீக அனுபவம் எளிதாய் அமையும்.


உபதேசம் அன்றும் இன்றும் மறைபொருளாகவே அருளப்படுகிறது. காரணம் அதன் அசல் தன்மை அறியாவிடின் அதன் உண்மை தன்மை மறுக்கப்பட்டுவிடும். எனவே தன்னை தேடி அடைந்த ஒருவர் உபதேசம் செய்வது நல்லது.


உபதேசத்தினை கேட்டு அதை அப்படியே பிறருக்கு போதிக்கும் போலி குருக்கள் இன்று தோன்றியுள்ளார்கள். எது எப்படியோ! நீங்கள் உண்மையாக இருந்தால் உங்கள் அருகில் ஒரு குரு இருப்பார் என்பது திண்ணம்.

உபதேசம், மெய்ப்பொருள் உபதேசம், திருவடி தீட்சை என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. உபதேசம் அறிய வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருந்தால் இறைமை உங்கள் அருகில் ஒரு குருவாக இருப்பார் என்பது உறுதி.


அன்பு உள்ளமே, ஆண்டவன் அருள்புரியும் ஆற்றலுடன் எப்பொழுதும் காத்திருக்கிறது. நாம் இறைவனுக்குள் இருக்கிறோம் நமக்குள் கடவுள் வாழ்கின்றது.

நாம் உயிரோடு உள்ளவரை நமக்கு இறைமையை அடையும் சந்தர்ப்பம் இருக்கிறது புலன்கள் (புலால்) சரியாக இருக்கும் தருணத்திலேயே உண்மையை உணரவேண்டும் என்ற ஆவல் இருப்பது அவசியம். 


மதம் ஒருவிதமான மயக்கத்தை உண்டாக்கி நம்மை நாமே மறக்க வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடுகிறது. கடவுள் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று அல்ல, அதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை அதன் அசல் தன்மையை அனுபவிக்கவேண்டும். 


தொடரட்டும் நமது உறவு, தொடர்ந்து சந்திப்போம். இறைமை குறித்து சிந்திப்போம்.


அன்பு நெஞ்சமே!

இறைவனை, உண்மையை உணர்வதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாக எல்லாம்வல்லது அருளட்டும்.


*இன்பம் இயற்கையின் வெளிப்பாடு, ஆனால் புரிதல் தன்மையின் பொருட்டு துன்பம் வெளிப்பட்டு இன்பம் துன்பம் என்ற இரண்டு சூழல்கள் உருவாக குழப்பமான மனநிலையில் மனிதன் வாழவேண்டி இருக்கிறது.*


இறைவனை அடைய, அநேக வழிகள் இருக்கின்றது என்று எல்லா மனிதர்களும் அல்லது அநேக மனிதர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.


ஆளுக்கு ஒரு வழியை பிடித்துக்கொண்டு என்வழி சிறந்தது என்றும் அவர்வழி சரியில்லை என்றும் வழிமுறைகளில்கூட அநேக அசிங்கங்களை முறைமை செய்து பின்பற்றுகிறார்கள்.


மதங்கள் இதற்கு சிறந்த உதாரணம். சாதிகள், குலத்தில் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பு வழியில் உயர்வு தாழ்வு, பிறவியின் பயனாகவே வசதியாக இருக்கின்றான், என்ற கோட்பாடுகள் பலவற்றை மதங்கள் உள்ளடக்கி இருக்கின்றன.


மதங்கள் போதவில்லை என்று புதிய வழிகளை போதிக்கும் அற்ப மனிதர்கள் அநேகம் உருவாகியுள்ளதை நாம் இன்று நடைமுறையில் காண்கிறோம்.

ஏதாவது ஒரு வழியில் நம்பிக்கையை மட்டுமே நாம் பின்பற்றுகிறோம் என்ற அறிவினை யார் கடந்து சிந்திக்கின்றார்களோ? அவர்களுக்கு என் கருத்துக்கள் அல்லது எனது எழுத்தின் சாரம் புரியும்.


உண்மையில் உண்மை என்ற ஒன்று இல்லாமல் இல்லை. ஏனோ அதை வரையறுப்பதில் மட்டுமே முரண்பாடும், அதைக்கொண்டு பிழைப்பு நடத்துவதற்கென்று வழிபாடும் இன்றும் இருக்கிறது.


இறைமை என்பது எல்லா இடத்திலும், எந்த உயிரிலும், உயிரற்ற நிலையில் உள்ள பொருள்களின் தன்மையிலும் இருக்கிறது.


கடவுளை, தனக்குள் கடந்து இருக்கும் இறைமையை அடைய முயற்சி தேவை. அந்த முயற்சிக்கு ஒரு வழிகாட்டி அவசியம் அல்லது சுய தூண்டுதல் அவசியம்.


ஆயிரம் வழிகள் இருக்கின்றது என்றால் ஏன் எல்லா மனிதர்களும் இறையை அடையவில்லை. அல்லது இறைவனின் அசல்தன்மையை உணரவில்லை.

காரணம் என்னவென்றால் தனிமனிதன் என்பவன் சுயசிந்தனையற்று இருக்கிறான். மேலும் சமூக அறிவினை கடந்து சிந்திப்பதில் மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகளுடன் இருப்பதே.


நாதம் ஓர் அனுபவம், அதை அடைய உபதேசம், இவற்றினை சரியாக போதிக்கும் வழிகாட்டி என ஒரு மனிதன் அறிந்து கொண்டால் இறைமையை அடைவதில் சிரமம் இருக்காது.


மனிதன் என்பவன் என்றோ அதாவது மொழி அறிவினை அடைவதற்கு முன்பே இறைமையை அடைந்து தன்னிறைவு பெற்று இருந்திருக்கிறான்.


இன்றும் தன்னிறைவு பெற்ற மனிதர்கள் இந்த பூமியில் இருக்கின்றார்கள். அவர்கள் பொருட்டே பூமியின் இயக்கம் அழகாக இருக்கிறது. எனவேதான் *நல்லவர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை* என்று ஔவையாரின் பாடல் வரிகள் தோன்றி இருக்கின்றது.


நல்லவன் என்றால் வரையறுக்கப்பட்டவர் என்றோ இயல்புக்கு மாறானவர் என்றோ உங்கள் மனம் கருத வேண்டாம்.


மனிதன் தன் வாழ்தலுக்கு இறைமை அவசியமா? அவனுக்கு ஆன்மீக அனுபவம் தேவையா? என்ற கேள்விகள் தோன்றுவது சரியா என்றும் நாம் அலசிப் பார்த்தல் அவசியம்.


*உலகின் உண்மைகளை கண்டுபிடிப்பவன் விஞ்ஞானி. உலகின் உண்மைகளை உணர்ந்து கொள்பவன் மெஞ்ஞானி.*


கண்டுபிடிப்பவன் தனது தேவைக்கு ஏற்ப அவனது கண்டுபிடிப்புகளை மக்களுக்கு வழங்குவதில் ஆர்வம் கொள்வது இயற்கையானது. உணர்ந்து கொள்பவன் கண்டு பிடித்தவன்போல் வழங்காமல் பிறரும் உணர வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறான்.


இன்றைய சூழல் அப்படி இல்லை. *ஆன்மீக அனுபவத்தினை உணராமல் அப்படி இருப்பதை நூல்களின் மூலமோ, அல்லது அடுத்தவரின் அனுபவத்தின் மூலமோ கண்டு பிடித்து தன்னை நிரூபிக்கும் முயற்சியை மட்டுமே அநேக வழிகாட்டிகள் நடைமுறை படுத்துகின்றனர்.*


இறைமை அடைவதற்கு வழிகாட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இறைமை அடையும் தன்மை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அடுத்த பதிவில் காண்போம்.


உண்மையை உணரதுடிக்கும் உயர்ந்த உள்ளமே!


நாத அனுபவத்துடன் ரகசியத்தை உரைக்கும் நல்ல குரு கிடைக்கவும், உங்களின் முயற்சிக்கு பலனாக உண்மை உணர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.


குரு என்பவர் யார்? ஏன் குரு நமக்கு தேவை?  அப்படி என்ன வித்தியாசம் நமக்கும் அவருக்கும் இருக்கிறது?


இதுவரை போகாத ஊருக்கு நாம் போக முயல்கையில் தேவையான வழித்தடத்தை அறிவதற்கு முன்பு, போன ஒரு நபரை நாம் விசாரித்து அறிகிறோம். அதுபோலவே இறை அனுபவம் பெற்றவரின் ஆலோசனையால் நாமும் அந்த அனுபவத்தை பெறமுடியும் என்பதால் இறையனுபவம் பெற்ற நபரை நாடுகிறோம்.


முற்றிலும் அறியப்படாத ஊருக்கு நாம் போகவே ஆசைப்பட மாட்டோம். காரணம் அதைப்பற்றிய அறிமுகம் நமக்கு இல்லை. அதுபோலவே இறையனுபவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் இறைமையை அடைய முயற்சிப்பதில்லை.


*கடவுள் அல்லது உண்மை என்பதை யாவரும் அறியப்படாமல் நம்பப்பட மட்டுமே அறிந்திருக்கிறார்கள். கடவுள் என்ன?  உண்மையில் கடவுள் இருக்கிறதா? எப்படி இருக்கிறது என்ற ஆவல் யாருக்கும் இல்லை.* ஆனால் அதிசயத்தக்க நிகழ்வுகளால் நம்ப மட்டுமே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


கடவுள் அல்லது உண்மை என்பதை யாவரும் அறியப்படாமல் நம்பப்பட மட்டுமே அறிந்திருக்கிறார்கள். கடவுள் என்ன?  உண்மையில் கடவுள் இருக்கிறதா? எப்படி இருக்கிறது என்ற ஆவல் யாருக்கும் இல்லை. ஆனால் அதிசயத்தக்க நிகழ்வுகளால் நம்ப மட்டுமே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


அத்தகைய உன்னத பேராற்றலை அறியும் வித்தையே யோகக்கலை ஆகும். கடவுள் அல்லது உண்மையை உணர்ந்து அதனோடு ஐக்கியப்படுதலை யோகம் என்று அழைப்பர்.


கண் இழந்த மனிதன் பொருள்களை நம்ப மட்டுமே செய்கிறான். காரணம் அவனால் பொருட்களை பார்க்க முடிவதில்லை. அதுபோலவே இறைவனை உணர தகுதியான மனம் நமக்கு இல்லை எனவே நாமும் இறைவனை நம்புகிறோம்.


கண் உள்ளவன் காட்சிகளால் பொருள்களை உணர்தல் போலவே குரு உண்மையை கடவுளை உணர்கிறார். மேலும் கண் போலவே செயல்பட்டு நமக்கு காட்சி தெளிவை ஏற்படுத்துகிறார்.


யார் நமக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைக்கிறாரோ அவரே குரு. குழப்பமற்ற மன நிலையுடன் செயல்பட்டு நமது அறியாமையை நீக்கி உண்மையை விளக்கும் ஒருவரே குரு.


பொதுவாக நாம் ஒரு சமூக அமைப்பை சார்ந்தவராகவே இருக்கிறோம். இந்துவாகவோ, கிருஸ்துவராகவோ, முகமதியராகவோ ஏன் இதுபோன்ற இன்னும் பல அமைப்பு சார்ந்த சிந்தனையுடன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பை சார்ந்தவராகவோ நாம் இருக்கிறோம்.


நமது சமூக அமைப்பே சரி என்ற உணர்வுடனோ அல்லது நம்மை போலவே பிற சமூக அமைப்புகளும் சரி என்ற உணர்வுடனோ மட்டுமே இருக்கிறோம்.


*பிறந்தது முதல் நாம் வளர்க்கப்பட்ட விதத்தில் மட்டுமே நம்மால் சிந்திக்க முடிகிறது. மேலும் நமக்கு போதிக்கப்பட்ட கருத்துக்களை மட்டுமே நம்மால் சரியாக உணர முடிகிறது.*


இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏன்  என்ற கேள்விகள் இன்றியே அனைத்து சடங்குகளையும் இன்றும் தொடர்கிறார்கள். மேலும் சமூக ஒழுக்கத்தை கடப்பது பற்றிய எண்ணம் கூட எழ அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.


மனிதன் சிறு சிறு வட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு தனக்கான கூட்டத்துடன் இருப்பதை தவிர வேறு எதையும் செய்யாமல் தனது வாழ்நாளை முடிக்கிறான்.


*சாதி, மதம், மொழி, நாட்டின் எல்லை என பலதரப்பட்ட குழுவாக மட்டுமே மனிதன் இருப்பதால் கடவுள் அல்லது உண்மை பற்றிய தெளிந்த ஞானம் அடைவதில்லை.*


ஆகவேதான் *எல்லைகளை கடந்த சிந்தனையை ஏற்படுத்த குரு நமக்கு அவசியமாக இருக்கிறது.*  ஒரு சில மனிதர்களுக்கு தனது அற்ப எல்லைகளை கடப்பதற்கு அவர்களது வாழ்வியல் முறையே போதுமானதாக அமைந்துவிடுகிறது. எனவே ஒருசிலர் விபத்துக்குள்ளாகி சிறு கட்டங்களை கடந்து சிந்திக்கின்றார்கள்.


எல்லைகளை கடந்த சிந்தனையை ஏற்படுத்த குரு நமக்கு அவசியமாக இருக்கிறது.  ஒரு சில மனிதர்களுக்கு தனது அற்ப எல்லைகளை கடப்பதற்கு அவர்களது வாழ்வியல் முறையே போதுமானதாக அமைந்துவிடுகிறது. எனவே ஒருசிலர் விபத்துக்குள்ளாகி சிறு கட்டங்களை கடந்து சிந்திக்கின்றார்கள்.


அவ்வகையில் நமக்கு நாமே போட்டுக் கொண்டு சிறைகளை ஒடித்துவிடும் அற்புத மனிதர் அல்லது அற்புத நிகழ்வு தேவைப்படுகிறது. ஆகவேதான் நமக்கு குரு தேவைப்படுகிறது.


இதுபோல் தன்னையும் தனது சமூகத்தின் பிடியில் தான் சிக்கி இருப்பதையும் உணரும் ஒருவர் எப்படி இருப்பார் என்பது நாம் அப்படி ஆகும் பொழுது மட்டுமே அறிய முடியும். இல்லையென்றால் அதைப்பற்றிய கற்பனையான முடிவை மட்டுமே சுமக்க முடியும்.


முதலில் உணர்வு பெற்றவர் என்பவர் எதாவது ஒரு சமூக அமைப்பை சார்ந்து இருந்தவராகவே இருப்பார். காரணம் மனித இனம் சமூக ஒழுக்கத்துக்கு உட்பட்டே இருக்கிறது.  ஏதாவது ஒரு வகையில் அவர் சமூகம் சார்ந்தவராகவே இருப்பார், மொழி அல்லது நாடு என்பது அவரது எல்லையாக இருக்கும்.  


அதேசமயத்தில் தான் யார்? என்ற உணர்வு பெற்றவுடன் எல்லைகளை கடந்துவிடும் ஆற்றல் அவருக்கு அதிகமாக இருக்கும்.



கடவுள் என்பது ஓர் அனுபவம் என்பதை தவிர அவரிடம் சடங்கு முறைகள் இருக்காது. அப்படி சடங்கு முறைகள் இருந்தால் அவருக்கு கடவுள் அனுபவம் இன்னும் கிடைக்கவில்லை என்றே பொருள்.


அனுபவம் அனுமானத்தினை விட்டொழிக்கிறது. சடங்கும், போலியான வார்த்தைகளும் இன்றி உண்மையான கருணையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் கடவுள் அனுபவிப்பவருக்கு வாய்க்கின்றது.


மற்றபடி குருவுக்கும் நமக்கும் எந்த பேதமும் இல்லை. ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ, உணர்ச்சிகளின் தன்மையில் மாறுபாடுகளுடனோ இருப்பது என்பது வளர்க்கப்பட்ட விதத்தில் அமைகின்றது.


கடவுள் அனுபவம் ஆண்களை ஆண்மையற்றவனாக செய்வதில்லை. மேலும் உணர்வுகள் மட்டுப்படுவது என்பது சாத்தியமில்லை. ஒரு மனிதன் தன் மேலான உணர்வுடன் வாழ முடியும் என்றால் கடவுள் அனுபவம் பெற்றவருக்கே அது சாத்தியம்.


போதும் என்ற மனநிறைவும், படுத்தவுடன் உறங்கும் தன்மையும், உணவில் பாகுபாடற்ற நிலையும், எப்பொழுதும் எதற்கும் நன்றியுணர்வு கொள்ளும் மாண்பும் கடவுள் அனுபவம் பெற்றவரின் தன்மையாக இருக்கும்.


போதும் என்று முடிக்கவில்லை தொடரவேண்டும் என்பதற்காக முடிக்கப்படுகிறது. கடவுள் பற்றிய விளக்கம் அடுத்த பதிவில் காண்போம் .


நன்றியுணர்வு கொள்வோம். நம்பிக்கை கடந்த உண்மையை சந்திப்போம்.


இறையை உணர இதமான சூழல் உருவாக்க அன்பு உள்ளங்களுக்கு வணக்கமுடன் எழுதுகிறேன். 


இங்கு நாம் கடவுள் குறித்து ஆராய்வோம். கடவுள் என்ற வார்த்தையின் பொருள் தனிமனித அனுபவம் சார்ந்தே இருக்கிறது.

இனிப்பு, காரம், அன்பு, இரக்கம், பணிவு போன்ற வார்த்தைகள் எப்படி தனிமனிதன் அனுபவம் பொருத்து இருக்கிறதோ அப்படியே கடவுள் என்பதும் இருக்கிறது. 


கடவுள் என்பது வினையாகு பெயர்சொல். நேரடியாக வினைகுறித்து வரும்பொழுது வினைச்சொல்லாகவும், பொருள் குறித்து வரும்பொழுது வினையாகு பெயராகவும் வரும்.


கடந்து போ என்று கட்டளைக்கும், கடந்த ஒன்றை சுட்டிக்காட்டுவதற்கும் கடவுள் என்ற பதத்தை பயன்படுத்தலாம்.    


கடவுள் என்ற வார்த்தை, உணர்ந்த உன்னத மனிதர்களுக்கு ஆழ்ந்த இன்பத்தை நல்கும், நன்றியுணர்வு மேலோங்கச் செய்யும். எப்படி ஊறுகாய் என்ற பொருள் அறிந்த நமக்கு ஊறுகாய் என்ற வார்த்தை கேட்டவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறதோ அப்படி கடவுள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஆனந்தம் உள்ளே ஊற்றெடுக்கும்.


*எங்கும், எதிலும் உள்ளே இருக்கும் ஆதாரப்பொருள் கடவுள். எனவே அதை அடையவேண்டும் என்றால் தன்னை தானே அறிய வேண்டும்.*


சர்வவியாபியாக இருக்கும் ஒன்று நமக்குள்ளேயும் இருக்கிறது, என்ற உண்மையை அறிந்த தமிழ் மொழி பேசும் மக்கள், அற்புதமான வார்த்தையில் அதை விளக்க முற்பட்டு கடவுள் என்ற பதத்தை அளித்தார்கள்


கடவுளை அடையாத, அடைய முடியாது என்ற நினைப்பில் இருக்கும் மனிதர்கள், தன்னை கடவுள் அறிந்தவர்களாக காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவு மதம் என்ற சடங்குமுறைக் கொள்கை.


கடவுளை அடைவதற்கு தேவையானது முதலில் அதைப்பற்றிய நம்பிக்கை, அதே சமயத்தில் நம்பிக்கை கடந்த உண்மையை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம்.


கடவுள் உணராதவன் அதனைப் பற்றிய கற்பனையான கருத்துக்களை முன்வைக்கிறான். கடவுளை கற்பனையில் அனுபவிக்கிறான். 


மேலும் அவனுக்கு சமூக மரியாதையும், தனக்கு அடிமையாக ஏவல் புரிய மனித கூட்டங்களையும் உருவாக்கும் பண்பு மேலோங்கி இருக்கிறது.


*உண்மையில் கடவுள் அறிந்து கொள்ளும் மனிதன் ஆணவம், தான் என்ற அகந்தையை விட்டொழித்து, தான் போதித்துக் கொண்டதை கடந்து தனக்குள் அமைதியான சூழலுடன் இறை நாதத்தினை அனுபவிக்கிறான்.*


தனக்குத்தானே போலியாக இருப்பதால் சிலர் கடவுள் அறிந்து கொண்டதாக கூறி அதைப் பற்றி போலியான வரையறைகளை தருகிறார்கள். அவர்களின் இருப்பு நிலையை சரியாக நினைத்து மக்கள் கூட்டம் அவர்களை பின்தொடர முன்வருகிறார்கள்.


*கடவுள் என்பது உனக்குள் உன்னை தேடும் முயற்சியே அன்றி, வெளியே இருக்கும் ஒன்றினுள் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சி இல்லை.*


கடவுளை உணர்ந்ததாக கூறும் ஒருவர் தனக்குள் என்ன அனுபவிக்கிறாரோ அதேபோல் உங்களுக்குள்ளேயும் இருக்கிறது. 


கடவுளை அடுத்தவரின் ஆலோசனை பெற்று உங்களுக்குள் தேடி அடைய வேண்டுமே அன்றி அடுத்தவரை பின்தொடர்தல் அவசியமன்று.


கடவுளை உணர்ந்தவர்கள் பிறர் கடவுளை உணர வேண்டும் என்ற ஆவலால் ஏற்படுத்திய வழிமுறைகள்கூட இன்று வெறும் சடங்காக பின்பற்றப் படுகிறதே அல்லாமல் அதன் மூலம் இறையை கடவுளை அடைய முற்படுவதில்லை.


பெரும்பகுதி மக்கள் பிறரை மதிக்கின்ற அளவிற்கு தன்னை மதிப்பதில்லை. அடுத்தவரால் மட்டுமே அதை சாதிக்கமுடியும் என்னால் அது முடியாது என்று தன்னை தானே சிறுமைப்படுத்திக் கொள்கிறார்கள். 


*மேலும், தன்னை சிறந்தவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர தனக்குள் சிறந்த ஒன்று இருக்கிறது அதை அடைய வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.*


*கடவுள் என்ற வார்த்தையில் நான் என்ற உணர்வுள்ள எந்த உயிரினமும் தனக்குள் தேடி அடைய வேண்டும் என்ற நேர்த்தியான அர்த்தம் இருக்கிறது.*


கடவுள் எந்த மத நூலுக்குள்ளேயோ அல்லது மதம் பரப்ப ஏற்படுத்தியுள்ள இடத்திலேயோ மட்டும் இல்லை. அது எங்கும், எதிலும் எவ்வகையிலும் இருக்கிறது.


ஏனோ, மனிதன் மதச்சடங்குகளையும், மதநூல்களையும் பலமுறை தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்திக் கொள்கிறான். 


உண்மையில் உண்மையைப் பற்றிய விளக்க நூல்களே உண்மையை அடையும் வழியை அடைத்துவிட்டது.


ஆனால் கடவுள் என்ற வார்த்தை அதன் மொழி வளத்தால் அல்லது சிறந்த மொழியின் வெளிப்பாட்டால் என்றும் புதுமையாக இருக்கிறது.



அன்பு நெஞ்சங்களே!  கடவுள் என்பதின் விளக்கம் எப்பொழுதுமே போதுமானது இல்லை. அது தனக்குள் உணரும் பொழுது மட்டுமே முழுமையடைகிறது.


*கடவுள் இல்லை, இருக்கிறது என்ற விவாதம் மணிக்கணக்கில் நடைபெற்றாலும் முடிவுக்கு வரமுடியாது. காரணம், அது விவாதப் பொருள் இல்லை, உணரும் பொருள்.*


சர்க்கரையின் இனிப்பு சிறந்ததா? கரும்பின் இனிப்பு சிறந்ததா? என்று பேசினால் அவரவருக்கு எது பிடிக்குமோ அதுவே சிறந்தது என்பது புரியும்.

*கடவுளைப் பற்றி விவாதம் செய்யும் பொழுதே அங்கு கடவுள் தன்மையற்று மடமை அல்லது அறியாமை வெளிப்படுகிறது.*


கடவுள் அதாவது நமக்குள் ஏதோ இருப்பதால் மட்டுமே நம்மால் இயங்க முடிகிறது. நமக்குள் இல்லை என்றால் நம்மால் இயங்க முடியாது. எனவே நமக்குள் இருப்பதை நாம் அறியாமல் அதை விவாதிப்பது முறையன்று.


நமக்குள் இருப்பதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் அந்த உள்ளத்திற்குத்தான் நமது முன்னோர் கடவுள் என்று அழைத்துள்ளார்கள்.


மற்றபடி கடவுள் என்பது சிலையோ, கல்லோ, வார்த்தை சலனமோ, எங்கோ ஒரு மூலையில் அல்லது உயர்ந்த இடத்தில் ஒளிந்திருக்கும் பொருளோ அல்ல.


கடவுளை மதத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் பண்பினை 

விட்டு உங்களுக்குள் உணர வழி தேடுங்கள். அர்த்தமற்ற, தேவையற்ற பிரிவினைகளுக்கு அழிவைத்தாருங்கள்.


நமக்குள் இருக்கும் கடவுள் நமக்கு போதிய ஞானத்தை அளிக்கட்டும். *மனிதம் வளரும் வழியை அடைவோம், மதங்களை மறந்தே வாழ்வில் சிறப்போம்...*


இதயத்தின் ஓசைபோல் என்னோடு இருக்கும் அன்பு உள்ளங்களே!  என்னை வாசிக்கும் புதிய உறவுகளே உங்களுக்கு வணக்கம்🙏


இறைவன், கடவுள், உண்மை இவை பற்றிய பேச்சுகள் இப்பகுதியில் தொடர்கிறோம்.

இப்பதிவில் ஆண்டவன் என்ற சொல்லின் பெருமையை அறிவோம்.

பரம்பொருள் ஒன்றுதான் இருப்பினும் அவரவர் விருப்பப்படி அதற்கு பெயர் வைத்து அழைத்துக்கொண்டனர். 


அவ்வகையில் ஆண்டவன் என்றும் அழைக்கின்றனர்.

கர்த்தர் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மதம் தனக்கு உரிமையானதாக பாவித்துக் கொண்டது. 


ஆண்டவன், இறைவன், கடவுள் போன்றே கர்த்தர் என்ற வார்த்தையும் பொதுவானதுதான். காப்பதால் கர்த்தர்.

இங்கே ஆண்டவன் என்ற பதத்தை எடுத்து அதைப்பற்றிய விளக்கத்தை அறிவோம். 


ஆண்டு, ஆளு, ஆளுநர் என்பது அனுபவம் குறித்த ஒரு சொல்.

அதாவது கடந்த காலத்தில் ஆட்சி செய்தவன் என்ற பொருளில் ஆண்டவன் என்று அழைக்கப்படுகிறது. 


நடந்தவன், வாழ்ந்தவன், பேசியவன் என்று கடந்த கால வினையால் குறிக்கும் பெயர்ச்சொல்.

இறைவன் முக்காலத்துக்கும் சொந்தமாக இருக்கும் தருணத்தில் கடந்த காலத்தில் மட்டும் இருந்ததைப்போல் ஆண்டவன் என்று அழைப்பதற்கு சரியான காரணம் இருக்கவே செய்கிறது.


உலகத்தை தோற்றுவித்தது எது? அது இன்றும் இருக்குமா? என்றால் என்றும் இருக்கும் ஒன்றே இந்த உலகத்தை தோற்றுவித்தது என்பது புரியும்.


அப்படியானால் ஏன் கடந்த காலத்தில் இருந்தது போல் ஆண்டவன் என்று அதை அழைக்கிறார்கள்?

உலகில் இருக்கும் அனைத்திற்கும் ஆதாரம் அந்த கடவுள் என்கிற உண்மை. அந்த ஆதாரத்தை மையப்பொருளாகக் கொண்டே அனைத்தும் இருக்கிறது.


*அனைத்தும் இருப்பதற்கு அடிப்படையான காரணம் அந்த ஆதாரப்பொருளாகிய ஒன்றே. அது ஆதாரப் பொருளாக இருப்பதால் நாம் இருக்கிறோம். நாம் தோற்றம் கொண்டவர்களாய் இருக்கிறோம். நமக்குள் தோற்றம் ஏதும் இன்றி அது இருக்கிறது.*


நாம் இருக்கிறோம். அது இருக்கிறது. அது நம்மைப் போல் இல்லை எனவே அதை ஆண்டவன் என்று உயர்தினை ஆண்பால் என அழைக்கிறார்கள். 


நம்மை ஆளும் பொருளாக இருப்பதால், நான் என்ற அகம் வளர்ந்து தன்னை மறைத்துக் கொண்டதால் ஆண்டவன் என்று அழைக்கப்பட்டது


உணர்ந்தவர்கள் தன்னை தனது அகந்தையை மதிக்கவேண்டும். நான் என்ற துணிவே வாழ்வதற்கு ஆதாரம். நான் அழிந்தால் வாழ்வது எளிதான காரியம் இல்லை. எனக்கு என்று பெயர் தேவையாக இருக்கிறது.


நான் என்ற ஒன்றே அனுபவிக்கிறது. அதன் பொருட்டே அனைத்து செயல்களும் அரங்கேறுகிறது. நான் என்பது நன்மை, தீமையுடன் இணைந்து செயல்படுகிறது. 


*நான் என்ற ஒன்றை கடந்த ஒன்று எனக்குள் இருக்கிறது என்ற தெளிவான அறிவே ஆண்டவன் என்ற வார்த்தைக்கு ஆதாரமாக இருக்கிறது.* 


மேலும் ஆண்டவன் என்று சொல்லும் பொழுது எல்லோருக்கும் பொதுவானவன் என்ற அர்த்தமும் மறைந்து இருக்கிறது. 


ஆள்பவன் என்ற நிகழ்காலத்து பெயர் சொல் தனி மனிதனைக் குறிக்கிறது. ஆள்பவனுக்கு உள்ளேயும் இருப்பவன் ஆண்டவன் என்று ஆழமான பொருள் பொதிந்து இருக்கிறது.


அன்பு உள்ளமே, உண்மைக்கு எந்த பெயரையும் வைக்கும் உரிமை உண்டு. அதே சமயத்தில் அது எல்லோரும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும்.


நமது தமிழ் மொழியில் வளமையான சொற்கள் போதுமான அளவில் இருக்கிறது.  மதம் சாராத குறியீட்டுப் பெயர்கள் பல உண்மைக்கு உண்டு.


*கற்பகம், விநாயகர் மதுரை, அங்கயற்கன்னி, மீனாட்சி, கருமாரி இவைகள் உண்மைக்கு வழிவகுக்கும் பொருளின் பெயர்கள் என்று உபதேசம் அறிந்தவர்களுக்கு புரியும்.*


ஆண்டவன் என்ற சொல்லோ தனக்குள் அனுபவம் பெற்ற மனிதர்களின் அற்புதமான வெளிப்பாடாக இருக்கிறது.

பெயர் பலவானாலும் உண்மை ஒன்றுதான். ஒன்று அவன்தான் என்று உணர்வோம்


ஆனந்த ரூபன் அனாதையாய் இருப்பவன் எனக்கு ஒரு வடிவம் தந்து தனக்கு ஒரு வடிவம் இல்லா தயாபரன் துணையுடன் இந்த சத்சங்கம் பகுதியை எழுதுகிறேன்.


கடவுள், ஆண்டவன் என்ற வார்த்தையும் அதன் நேர்த்தியும் முன்பு பார்த்தோம். இங்கு அனுபவம் அடைய நாம் செய்ய வேண்டியதை பார்ப்போம்.


ஒன்றை குறித்து பேசுவதற்கு அதைக்குறித்த தகவல்கள் போதுமானது இதற்கு எந்த உதாரணமும் தேவையில்லை. போகாத ஊரின் பெருமைகளை அவ்வூரின் வரைபடம் அங்கு இருக்கும் சூழ்நிலைகள் பற்றி கட்டுரைகள் படித்தவர் பேசமுடியும். 


*உண்மை என்பது என்றும் நிலையாய் எல்லா இடத்திலும் தெளிவாய், உணர நினைக்கும் அனைவருக்கும் உணர்த்தும் அன்பாய் இருக்கிறது.*


ஏனோ மனிதன் கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்குகளை செய்திருக்கிறான். அதனை இன்றைய மனிதனும் சுயஅறிவு இன்றியே பின்பற்றுகிறான்.


முதலில் நீங்கள் உங்களை கவனியுங்கள். உங்கள் கைகள், கால்கள், உங்களின் உடம்பு மற்றும் அனைத்து அவயங்களையும் சற்று நேரம் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியுடன் எவ்வளவு தனித்தன்மையுடன் இருக்கிறது.


உங்களின் உடம்பு உங்களை சுமக்கின்றது. உடம்புக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் உணர முடியும். காரணம் நீங்கள் உங்களது உடம்பை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் வேறு உங்களின் உடம்பு வேறு.


*எனவே நாம் இந்த உடம்பு மட்டும் இல்லை. உடம்பினை கடந்தும் நாம் இருக்கிறோம். இந்த அற்புதமான உடம்பு நம்மை பாதுகாப்புடனும், நமது உணர்வுகளை, சிந்தனை முடிவுகளை, கருத்துப் பரிமாற்றத்தினை வெளிப்படுத்தும் ஆற்றலுடனும் இருக்கிறது.*


உடம்பில் நாம் இருக்கிறோம் ஆனால் நம்மை அடையாளப்படுத்துவது நமது உடம்பு.  உடம்பு இது என்று அறிவது மனம். மனம் என்ற ஒன்றுதான் இதை படிக்கிறது. அடியேன் எழுதுவதை புரிந்து கொள்கிறது.


உடம்பு தாய். தந்தையின் புணர்வால் வெளிப்படுகிறது. எனவே உடம்பின் வடிவம் அதன் தன்மை ஓரளவு நமது முன்னோர்களின் வடிவத்தை ஒத்து இருக்கிறது.  


உடம்பினை நிலையாகவும், இயக்கத்துடனும் இருக்கச் செய்வது உயிர். உயிர் இல்லாத உடம்பு அதன் இயக்கத்தை இழந்து அழிந்து விடுகிறது


எனவே உயிர் என்ற ஒன்றுதான் உடம்பினை செம்மையாக வைத்துக்கொள்கின்றது.


இப்பொழுது உங்களுக்கு புரியும், உடம்பு, மனம், உயிர் என்ற மூன்றுதான் நாம்.


*காட்சிப் பொருளாக இருக்கும் உடம்பு, உடம்பினை இயக்கும் உயிர், இதை விருப்பத் தேர்வின் மூலம் தன் சுயதேவைக்கு ஏற்ப இயக்கிக்கொள்ளும் மனம் என்பதை நினைவில் நிறுத்துவோம்.*


உடம்பின் இயல்பு தோன்றி வளர்ந்து பிற உடம்பினை தோற்றுவித்து பின் தளர்ந்து அழிந்து விடுவது மேலும் இதற்கு ஒரு குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.


உடம்பில் பல்வேறு அவயங்கள் அங்கம் வகிக்கின்றது. தோன்றி வளர்ந்து அழியும் செயல் நடைபெற ஏதுவாக பலதரப்பட்ட கருவிகளை உடம்பு உள்ளடக்கி இருக்கிறது.


உடம்பும் அதன் அசல் தன்மையும் மிகவும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருப்பினும், உடம்பில் ஆற்றலை முழுமையாக எல்லோரும் பயன்படுத்துவது இல்லை.


*உடம்பில் நான் இருக்கிறேன் என்று ஒருவர் உணர்ந்தால் உடம்பில் இருக்கும் மனதை புரிந்து கொண்டார் என்று பொருள். உடம்பு தன்னிச்சையாக செயல்படுகிறது என்பதை அறிந்தால் உயிர் என்பதை உணர்வதாக பொருள்.*


உடம்பினையும், உயிரையும் உணரும் ஒருவர் இதை உணர்வதாகிய நான் என்பது எனது மனம் என்று புரிந்து நான் என்பதை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதை அறிவார்.


அப்படி மனதில் அசல் தன்மையை உணர்பவர் மட்டுமே ஒழுக்கத்துடன் இருக்க முடியும். அவரின் செயல்பாடுகள் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.


*உடம்பின் பாகங்கள் அதன் அதிசயங்கள் அத்தனையும் நம்மால் அனுபவிக்க முடியும்.* உடம்பு யாதொரு குற்றமும் இல்லாமல் இருப்பது ஒரு சிறப்பு. பொறிகளில் குறைபாடு அங்கங்களில் ஊனம் போன்ற குறைகள் நம்மை நாம் முழுவதும் அறிய தடையாக மாறிவிடும்.


உடம்பினை கவனிக்க கவனிக்க அதே உண்மைகள் நமக்கு தெளிவாக புரியவரும். சுவாசம் நம்மையறியாமல் நடக்கிறது. மேலும் அதன் மீது நமது தாக்கத்தை செலுத்த முடியும் என்பதும், புலன்களின் செயல்பாடுகளை நம்மால் மறுக்க முடியும் என்பதும் உடம்பினை கவனிப்பதால் புரிய வருகிறது.


*உண்மையை உணர துணையாக உடம்பு இருப்பதால் உடம்புக்கு மெய் என்று பெயர்.* உடம்பு நன்கு பேணி அதன் செயல்பாடுகளை கவனித்து அதன் அதிசயத்தில் மயங்காமல் அற்புதத்தை உணர்வது நமக்கு அவசியம்.

இன்றே உங்களின் உடம்பினை கவனிக்க துவங்குங்கள். மீண்டும் சந்திப்போம் தொடர்ந்து சிந்திப்போம்.


துவக்கமும் முடிவுமாக இருக்கும் ஏகன் நமக்கு இந்த இனிய சூழலில் அற்புத ஆற்றலை வளர்கட்டும். உணர்ச்சியும் அறிவும் இருகண்களாக இருக்கட்டும்.


உண்மையை தேடுபவர்களுக்கும், உண்மையை அறிய முற்படுவோருக்கும், உண்மையை புரிந்து கொள்ள முடியாத அறிவிளிகளுக்கும் இந்த சூழல் விடியலை உருவாக்கட்டும்.


*அகர முதல எழுத்தெல்லாம் ஆதி*

*பகவன் முதற்றே உலகு*


கடவுள் உண்டு என்பதற்கு தனிப்பட்ட சாட்சியம் தேவையில்லை. அதனை அனுபவிப்பதற்கு தனிமனித முயற்சி அவசியம்.


*சடங்கு செய்வதற்காக நாம் பிறக்கவில்லை. இங்கே நாம் இருப்பதற்கு ஆதாரப்பூர்வமான துவக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம்.*


வள்ளுவர் உலகத்தினை அடிப்படையாக துவக்கமாக கொண்டு இருக்கிறது என்று சொன்னதால் உண்டு என்று நமக்கு நாமே முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது.


மாறாக திருவள்ளுவர் ஏதோ அறியாமல் இதை உரைத்திருக்கிறார், அல்லது அது திருக்குறளுக்குள் இடை செருகல் என்றும் நினைத்துவிடக் கூடாது.


உண்டு என்பதற்கு ஆதாரம் அத்திருக்குறள் என்றால், அடைவதற்கும், அனுபவிக்கவும் அவரால் எழுதப்பட்டிருக்கிறதா என்றால் ஆம். அடுத்தடுத்த குறள்களின் வழியே அதை அடைவதற்கு முடியும் என்றும், அதற்கான முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார்.


*"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்*

*நற்றாள் தொழாஅர் எனின்"* என்ற அடுத்த குறள் வழியே நமக்கு உரைப்பது, படிப்பதின் மூலம் பெறும் அறிவால் என்ன பயன் உணர்ந்தவரின் நற்றாள் தொழாவிட்டால்.


இதன்மூலம் உணர்ந்தவரின் வாக்கு அவசியம் என்று உணரலாம். ஊரின் எல்லைகளையும் அதன் வடிவங்களின் அமைப்பையும் வரைபடத்தின் மூலம் நாம் அறியலாம். இருப்பினும் அந்த ஊரின் அசல்தன்மை அறிய அங்கே சென்று வந்தவரின் அனுபவத்தினைப்போல் அது தெளிவாக இருகாது. அதுபோலவே உணர்த்துபவரின் வாக்கு நமக்கு பெரும்பயன் உள்ளதாக அமையும்.

*மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்*

*நிலமிசை நீடுவாழ் வார்*


மலர்மிசை ஏகுவதற்காகவே நாம் யோகக்குடில் அமைத்து மறைபொருள் உபதேசம் செய்து மானடி அடைய வழி வகை செய்கிறோம்.


அவ்வகையில் அடியேனை அணுகிய அன்பு உள்ளங்களே! உங்களுக்கு உரைப்பதெல்லாம் நிலமிசை நீடு வாழும் தன்மை அடைய வேண்டும் என்பதே.


அணுகாத, அணுக இயலாத, அணுக வேண்டியதில்லை என்ற நினைப்பில் இருக்கும் அன்பு உள்ளங்களே! உங்களுக்கு உரைப்பது


*"ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்*

*மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்"* என்று உரைக்கும் ஒன்றே உபதேசம். அதை உங்களின் அருகாமையில் ஞானம் பெற்ற மனிதர்கள் இருப்பின் அவர்களிடத்தில் கேட்டு அதை அறிந்து பிறவிப் பெருங்கடல் நீந்திடுவீர்களாக.



*முற்றும்*